காங்கேசந்துறை மாலினி அரவிந்தன். நான் யாழ்ப்பாணம், சுண்டுக்குளியில் பிறந்தாலும் நான் புகுந்த, கணவரின் ஊரான காங்கேசந்துறை பற்றி எழுதுகின்றேன். இது இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும். ஆறு வட்டாரங்களைக் கொண்ட இந்த நகரம் வடக்கே பாக்குநீரிணை, கிழக்கே பலாலி விமான நிலையம், தெற்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், மேற்கே கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் போன்ற புகழ்பெற்ற இடங்களை எல்லையாகக் கொண்டது. இலங்கையின் காங்கேசந்துறை நகரம் விமான, கப்பல், தொடர்வண்டி, பேருந்துப் போக்குவரத்தின் முக்கிய மையமாக விளங்குகின்றது. வடக்குத் தெற்காக யாழ்ப்பாணம்- காங்சேந்துறை வீதியையும் கிழக்கு மேற்காகக் கீரிமலை - பருத்துறை வீதிகளையும் கொண்டது. தலைநகர் கொழும்பு வரையிலான 256 மைல் கொண்ட தொடர்வண்டிப்பாதைச் சேவை இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. காங்கேசந்துறையின் வடக்கே உள்;ள இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு 45 நிமிடத்தில் படகில் செல்லக்கூடியதாக இருக்கின்றது. காங்கேசந்துறைப் பகுதியில் புராதன கோயில்கள் அதிகமாக இருந்ததால், இந்த நகரத்தைச் சங்ககாலத்தில்; ‘கோயிற்கடவை’ என்றும், இங்...