Story- Creeper

ஏங்கித்துவளும் கொடியொன்று..! குரு அரவிந்தன் காதலர் உழையராகப் பெரிது உவந்து சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற, அத்த நண்ணிய அங்குடிச் சீறூர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் புலம்பு இல் போலப் புல்லென்று அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே. ‘நிலா, நிலா..!’ வாசலில் நின்று குரல் கொடுத்தாள் ரதி. குரல் கேட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்த நிலா, பக்கத்து தெருவில் வசிக்கும் ரதி வாசலில் நிற்பதைக் கண்டாள். இரண்டோ மூன்று முறை கோயிலில் சந்தித்ததால் சினேகிதமாகியிருந்தாள். ‘என்ன ரதியக்கா? உள்ளே வாங்கோ!’ ‘நாய் குரைக்குது, கடிக்குமா?’ ‘இல்லையக்கா, கட்டியிருக்குது, தெரியாதவையைக் கண்டால் குரைக்கும், அவ்வளவுதான்!’ ரதி கேற்ரைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள். ‘குரைக்கிற நாய் கடிக்காது என்று சொல்லுவினம்..!’ ‘நீங்கள் இதை சொல்லுறீங்க, போனகிழமை அவர் பயணத்தால வீட்டை வரேக்கையும் அவரை வாசல்ல கண்டிட்டு, யாரோ என்று நினைத்துக் குரைக்கத் தொடங்கி விட்டுது..!’ பெரிய காணியின் நடுவே கட்டப்பட்ட பெரியகல்வீடு பார்ப்தற்கு அழகாக இருந்தது. வீட்டின் இரு பக்கமும் சோலை போல வாழை, மா, பலா என்று பழமரங்களால் நிறைந்திருந்தது. முன்பக்கத்தில...