Valentine - வெள்ளைப் புறா ஒன்று..!

 




வெள்ளைப் புறா ஒன்று..!


குரு அரவிந்தன்


அவளுக்கு என்ன வயதிருக்கும் என்று சுரேன் யோசித்துப் பார்த்தான்? 


பார்ப்பதற்குச் சின்ன வயதுப் பெண்ணாகத் தெரிந்தாள்! ஆகக் கூடினால் இருபத்திரண்டு அல்லது இருபத்திமூன்று தானிருக்கும். 


அவளை முதன்முதலாய் கோயிலில் கண்டபோது கும்பிடுவதையும் மறந்து அவனையறியாமலே அவளைத் திரும்பிப் பார்த்திருக்கிறான். அவள் தலைகுனிந்தபடி பிரகாரத்தைச் சுற்றி வந்ததையும், கண்களை மூடியபடி பிரார்த்தனை செய்ததையும் கண்கொட்டாமல் அவதானித் திருக்கிறான். 


அப்புறம் சில பொது நிகழ்ச்சிகளிலும் அவளைக் கண்டிருக்கின்றான். ஆனாலும் அவளோடு பேசுவதற்கு அவனுக்குச் சந்தர்ப்பம் ஒரு போதும் கிடைக்கவில்லை.


பொட்டு வைக்காமல் பூ இல்லாமல் மொட்டை மரம் போல அவள் இருந்த கோலத்தைப் பார்த்தபோது அவனுக்கு அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்பதை அறிவதில் ஆர்வம் ஏற்பட்டது. அவளின் அந்தக் கோலத்தைப் பார்த்து அவன் உண்மையிலேயே அதிர்ந்து போயிருந்தான். 


ஏன்? எதற்காக இந்த விதவைக் கோலம்? யார் கொடுத்த கோலம்? இதை அறியாவிட்டால் அவனுக்கு மண்டைவெடித்து விடும் போல இருந்தது!


சுரேனின் அதிஷ்டமோ என்னவோ அவளும் அவனது கொம்பனியில்தான் புதிதாக வேலைக்குச் சேர்ந்தாள். 


நித்யா என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.


குழுத்தலைவன் என்ற முறையில் நித்யாவிற்;கு வேலைப் பயிற்சி கொடுக்கும் பொறுப்பு சுரேன~pடம் கொடுக்கப் பட்டது. வேலைப் பயிற்சி கெடுத்தது மட்டுமல்ல சிறிது சிறிதாக நித்யா வைப் பற்றிய முழு விபரங்களையும் அவன் அறிந்து கொண்டான். 


அவள் காலையிலே ஒருவனுக்கு மனைவியாகி மாலையிலே கண் முன்னால் தாலியைப் பறிகொடுத்தவள் என்பதும் அவனுக்குத் தெரிய வந்தது. 


தாலிகட்டிய அன்றே திருமண வீட்டு முற்றத்தில் விழுந்து வெடித்த ஷெல்லில் அவளது கணவன் பலியானது ஒரு துயர் மிகு சம்பவம் தான். 


உள்நாட்டு யுத்தம் என்ற போர்வையில் இராணுவ முகாம்களில் இருந்தும், குண்டுவீசும் விமானங்களில் இருந்தும் இப்படியான வெறித்தனமான தாக்குதலால் பல இளம் விதவைகள் தாய்நாட்டில் தினமும் உருவாக்கப்படுகிறார்கள் என்பதையும் அவன் அறிந்தபோது தாங்கமுடியாத வேதனையில் துடித்துப் போனான்.


வெள்ளைப் புறாக்கள் வானத்தில் சிறகடித்துப் பறப்பதைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு தனது அக்காவைப் பற்றிய நினைவுகள் தான் அடிக்கடி வரும். 

அவளும் இந்தப் புறாக்களைப் போலத்தான் எத்தனையோ கனவுகள், கற்பனைகளோடு வாழ்ந்தவள். சிறகொடிந்த பறவைபோல அவளின் வாழ்க்கையே முடக்கப்பட்டபோது அவள்பட்ட வேதனையை அவன் பார்த்திருக்கின்றான்.  அவனது குடும்பத்தில் நடந்த அந்த துயரச் சம்பவத்தை அவனால் மறக்க முடியாமல் இருந்தது. நாட்டிலே நடந்த இனக்கலவரத்தில் அவனது அக்கா, கணவனை இழந்து பிறந்தவீடு வந்ததும் அதன்பின் வெள்ளைச் சேலையோடு விதவைக் கோலம் பூண்டு வீட்டுக்குள் முடங்கிக் கிடந்ததும் அவனுக்கு இப்பொழுதும் ஞாபகத்தில் இருக்கிறது. 


யாராவது அக்காவிற்கு மறுவாழ்வு கொடுக்க மாட்டார்களா என்று அவன் சின்னவயதில் ஏங்கியிருக்கின்றான். 

ஆனால் அன்றைய சூழ்நிலையில் வந்தவர்கள் எல்லாம் அக்காவை விலைபேசினார்களே ஒழிய அவளை மனிதாபிமானத்தோடு ஏற்றுக் கொள்ள யாரும்  முன்வரவில்லை. காலப்போக்கில், தனக்குள்ளே ஒடுங்கிவிடும் ஆமை போல அக்காவும் உணர்ச்சிகளைத் தனக்குள்ளே அடக்கி ஒடுங்கிப் போயிருந்தாள். அவன் வளர்ந்து பெரியவனான போதுதான் ஒவ்வொரு வெள்ளைச் சேலைக்குள்ளும் துயரம் நிறைந்த பல கதைகள் இருப்பது அவனுக்குத் தெரிய வந்தது. 


அந்த நிலையில் தான் அவன் தன்எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொண்டான். திருமணம் செய்தால் ஒரு இளம் விதவையைத் தான் திருமணம் செய்யவேண்டும் என்று தனக்குள் முடிவெடுத்துக் கொண்டான். 

நித்யாவை முதன்முதலாகச் சந்தித்தபோது சுரேனுக்கு அவளிடம் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது. அதனால் அவளது நலனில் அவன் மெல்லமெல்ல அக்கறை காட்டத் தொடங்கினான்.


மதியச் சாப்பாட்டு நேரம் சக ஊழியர்கள் எல்லோரும் சேர்ந்து அருகே உள்ள சிற்றுண்டிச் சாலைக்குச் சென்று உணவு அருந்துவார்கள். நித்யாவும் அவர்களோடு சேர்ந்து உணவருந்தச் சிற்றுண்டிச்சாலைக்குச் செல்வாள். அவர்கள் பலவிடயங்களைப் பற்றியும் அங்கே பேசுவார்கள். அப்படி அவர்கள் உரையாடும் போது தனது இனத்தையோ அல்லது மொழியையோ யாராவது தாழ்த்திப் பேசினால் அவனுக்குப் பட்டென்று கோபம்வரும். 


அவன் ஆவேசமாய் பேசுவதைப் பார்த்து "வாய்ச் சொல்லில் வீரனடி...!" என்று தனக்குள் நினைத்து அவள் மௌனமாய் சிரித்திருக்கிறாள். ஒரு நாள் அவன் விடுப்பு எடுத்துக் கொண்டு சகமாணவர்கள் தாய்நாட்டில் படும் துயரத்தை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்க இங்கே நடத்தப் பட்ட அமைதிப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தான். வேறு ஒரு சமயம் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் எம்மினப் பெண்களைப் பற்றித் தவறான கட்டுரை ஒன்று வெளிவந்தபோது அவன் கொதித் தெழுந்து மறுப்புக் கடிதம் எழுதியிருந்தான். 


அந்தக் கடிதத்தைப் பற்றி அவளிடம் அவளது சினேகிதி குறிப்பிட்போது, போது அவனைப் பற்றி அவள் வைத்திருந்த தப்பான அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டாள். அதன்பின் அவளுக்கு அவனிடத்தில் ஒரு வித மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது. தன் இனத்திலும் மொழியிலும் சுரேன் வைத்திருந்த ஈடுபாட்டை நினைத்து அவள் அவனைப் பற்றிப் பெருமைப் பட்டிருக்கிறாள். ஆனாலும் அவள் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். இந்தச் சமூகத்தில் இருந்து "தன்னைப் போன்றவர்கள் ஒதுக்கப்பட்டவர்கள்" என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.


நித்யாவைத் திருமணம் செய்ய சுரேன்; விரும்பினாலும், அவளுடைய மனநிலையை அறிந்து கொள்ள அவனால் முடியவில்லை. 


என்னதான் நாடுமுன்னேறினாலும் சமுதாயக் கட்டுப்பாடுகள் அப்படியேதான் இருக்கின்றன என்பதும் அந்தக் கட்டுப் பாட்டுக்குள் நித்யாவும் மூழ்கி இருக்கிறாள் என்பதும் அவனுக்குத் தெரியும்.


"ஏன் அக்கா நீங்கள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது?" என்று அவன் ஒருசமயம் மனம் பொறுக்க முடியாமல் தனது அக்காவிடம் கேட்டிருக்கிறான்.


அதற்கு அக்காவின் தலைகுனிந்த மௌனம்தான் அவனுக்குப் பதிலாய்க் கிடைத்தது. அக்காவின் மௌனத்திற்கு இந்த சமுதாயமும் ஒரு காரணம் என்பது அவனுக்குத் தெரியும். அக்காவைப் போலவே இவளும் சமுதாயத்திற்குப் பயப்பட்டு மறுத்து விடுவாளோ என்று நினைத்தான்.


எது எப்படி இருந்தாலும் சொல்ல நினைத்ததை நித்யாவிடம் நேரடியாகச் சொல்லிவிடுவது என்று முடிவெடுத்துக் கொண்டான். சொல்ல நினைத்ததைச் சொல்லாமல் விட்டதால் காலமெல்லாம் அதற்காக ஏங்கிக் கண்ணீர் வடித்த பலரை அவன் பார்த்திருக்கிறான். 


அந்த நிலை தனக்கும் ஏற்படக்கூடாது என்பதில் பிடிவாதமாய் இருந்தான். எனவே தான் வாலன்டைன் தினத்திலன்று நித்யாவைச் சந்தித்து தன்மனதில் இருப்பதை அவளிடம் கொட்டிவிட நினைத்தான். 


மதிய உணவருந்த அந்தச் சிற்றுண்டிச் சாலைக்குச் சென்ற போது வழமையாக அவளுடன் வரும் சினேகிதிகள் யாருமே வரவில்லை. சினேகிதிகள் அவர்களின் ஜோடிகளைத் தேடிச் சென்றுவிட்ட படியால் இவர்கள் இருவர் மட்டும் தனித்து விடப்பட்டார்கள். 


ஒரு ஒதுக்குப்புறமாக அவர்கள் அமர்ந்திருந்த போது அந்தச் சந்தர்ப்பத்தைச் சுரேன் பயன்படுத்திக் கொண்டான்.

  

"நித்யா நீங்கள் என்னோடு பழகும்போது ஜஸ்ட் எ ஃப்ரென்ட் என்றுதான்  பழகினேன், ஆனால் உங்களோடு பழகிய பின்தான் என்னிலே நீங்கள் வைத்திருக்கும் அன்பு, நம்பிக்கை இவையெல்லாம் என்னைச் சிந்திக்க வைத்தன. சுயநலமில்லாத உங்களுடைய செய்கைகள் உங்களை என்மனதில் நட்பு என்கிற இடத்தில் வைப்பதை விடமேலான ஒரு இடத்தில் வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டி விட்டது. அதுமட்டுமல்ல உங்களுடைய அன்பு எனக்கு, எனக்குமட்டும் தான்வேண்டும் என்கிற சுயநலமும் எனக்குள் உருவாயிற்று. இந்த சுயநலத்தில் பொறாமையில்லை, எரிச்சலில்லை ஆனால் எனக்காக நீங்கள் இந்த உலகில் வாழனும் என்ற ஏக்கம் இருக்கிறது. இதற்குப் பெயர் அன்பா, இல்லை காதலா என்று எனக்குத் தெரியாது. எப்படி வேண்டுமென்றாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். இது காதல்தான் என்றால் கட்டாயத்தில் இந்தக் காதலை உங்கள்மீது திணிக்க நான் விரும்ப வில்லை, காதல்தானாக மலர்ந்து மெல்லக் கனிந்து வரவேண்டும். இன்று என்ன தினம் என்பதாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?’


அவள் எதுவும் பேசாது மௌனமாக அமர்ந்திருந்தாள். அவன் செல்ல வந்ததைச் சொல்லி விடுவதில் ஆர்வமாக இருந்தான்.


‘நீங்கள் தான் எல்லாவற்றையும் மறந்து முற்றும் துறந்த ஒரு வாழ்க்கை வாழ்கிறீர்களே! நான்  இன்று இங்கே வரும்போது ஒரு பூக்கடைக்குப் போயிருந்தேன். ஏனென்றால் இன்று வாலன்டைன்ஸ்டே! அதாவது எங்கள் மொழியில் சொல்வதானால் அன்பைப் பரிமாறும் நாள்! காதலர்களுக்கு காதலர்தினம்!’


‘இந்த ரோஜாமலரைக் கூட உங்களுக்காகத்தான் வாங்கினேன். அன்பின் மௌனமொழிகள் தான் இந்த மலர்கள் என்று சொல்வார்கள். எனது அன்பை ஆர்ப்பாட்டமில்லாமல் மென்மையாக உங்களிடம் சொல்வதற்கு இதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை! உங்களாலே இதைப் புரிந்து கொள்ள முடிந்தால் இந்த மலர் உங்களோடு பேசும், என் உள்ளத்தில் இருக்கும் ஏக்கத்தை, என் லட்சியத்தை ஆயிரமாயிரம் கதைகளாய் உங்களுக்குச் சொல்லும்!"


"இப்போ நான் உங்களிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான், நீங்கள் என்னிடம் இருந்து இந்த ரோஜாவை ஏற்றுக் கொண்டால் அது எங்கள் நட்பிற்கு நல்ல அறிகுறியாய் இருக்கும்! இதையே நீங்கள் உங்கள் கூந்தலில் சூடிக்கொண்டால் அது இந்த நட்பை விட மேலான ஒரு இடதில் என்னை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று  என்னை நம்ப வைக்கும்!" என்று சொல்லியபடி அவன் அவளுக்கு அருகே வந்து வலது கையால் அந்த ரோஜாவை அவளிடம் மெல்ல நீட்டினான். 


அவள் அதை ஏற்பாளா, இல்லையா என்கிற ஏக்கம் அவன் கண்களில் தேங்கி நின்றது. ஒவ்வொரு வினாடியும் யுகமாய்த் தொடர்ந்தது.


முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


அதை வாங்குவதா விடுவதா என்ற தயக்கம் அவள் கண்களிற் தெரிந்தது. அவளது அந்தத் தயக்கம் அவனை மேலும் ஏமாற்றம் அடையவைத்தது. 


"உங்களுக்கு விருப்பமில்லா விட்டால் வேண்டாம், நீங்களே இந்த மலரைக் கசக்கி எறிந்துவிடுங்கள்! ஒருவர் மீது ஆசை வைப்பதும் ஒரு விதத்தில் அன்புத் தொல்லை தான் என்பது இப்பொழுது தான் எனக்கும் புரிகிறது!" என்றான் ஏமாற்ற த்தோடு. 


அவனது ஏக்கமும், எதிர்பார்ப்பும் அதனால் அவனடைந்த வேதனையும் அவளைச் சிந்திக்க வைத்தது. இதற்கு மேலும் அவனது மனதை நோக வைக்க வேண்டாம் என்று நினைத்தவள் இரண்டு கைகளையும் தயக்கத்தோடு நீட்டி அந்த ரோஜாவை  அவனிடம் இருந்து வாங்கிக் கொண்டாள்.


"தாங்யூ நித்யா.....எங்க நட்பு என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பதை உறுதி செய்து விட்டீர்கள்...இப்போ நான் உங்களிடம் கேட்ப தெல்லாம்......என்னவென்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்" தயக்கத்தோடு கேட்டான்.


"சுரேன், எந்தக் காரணம் கொண்டும் உங்க மனசு நோகக்கூடாது, எங்கள் தூய நட்பு உடைந்து போகக் கூடாது என்பதற்காகத் தான் நான் இந்த ரோஜாவை உங்களிடம் இருந்து வாங்கினேன். நான் வாழ்விழந்தவள். என் நிலைமை என்னவென்று உங்களுக்குப் புரியும், இதை என் கூந்தலிலே சூடும் தகுதி எனக்கில்லை...!" என்றாள் ஆற்றாமையோடு.


சொல்லும் போது அவள் உதடுகள் விம்மித் துடித்தன. கண்கள் பனிக்க அந்த ரோஜாவை அவனிடமே திருப்பித் தந்தாள்.

 

இதைச் சற்றும் எதிர்பாராத அவன் முகத்தில் சட்டென்று வாட்டம் தெரிந்தது. படித்த பெண் இதையெல்லாம் புரிந்து கொள்வாள் என்றுதான் நினைத்திருந்தான். 


"இவர்களைத் திருத்தவே முடியாது! தங்களுக்குத் தாங்களே விலங்குபோட்டவர்கள்" என்று தனக்குள் முணுமுணுத்தான்.


‘என்னது? சொல்லவந்ததை கொஞ்சம் உரத்து சொல்லுங்க’ என்பது போல அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.


"ஏன்...? என்னைப் பிடிக்கலையா? இல்லை இந்தச் சமுதாயத்தின் கட்டுப்பாடுகளை மீறிப்போகப் பயப்பிடுகிறீர்களா?" என்றான் சுரேன்’


அவள் எதுவும் பேசாமல் மௌனமாய் எழுந்து நின்றாள். 


"நித்யா பிளீஸ்!...உங்கள் நிலைமை எனக்குப் புரியுது! ஆனால் உங்க மனசைத் தான் என்னாலே புரிஞ்சுக்க முடியல்லை? எனக்காக உங்க மனசைக் கொஞ்சம் திறந்து ஏதாவது, உங்க மனசிலே என்ன இருக்கிறது என்பதையாவது கொஞ்சம் சொல்ல மாட்டீங்களா? ஏக்கத்தோடு கேட்டான்.


"அப்படி எதுவும் இல்லை. உங்களை எனக்குப் பிடிக்கும். இந்த மலரை காதலருக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் அர்பணிக்கலாம். ஏனென்றால் வாழ்க்கை இருண்டு போன என்னைப் போன்ற பெண்களுக்கு புதுவாழ்வு கொடுப்பதற்காக சமுதாயக் கட்டுப்பாடுகளை மீறிப் புதுமைப்புரட்சி செய்யும் உங்களைப் போன்ற மனிதத்தெய்வங்களுக்கும் இதைத் தரலாம் தானே?’


அவளது ஒவ்வெரு வார்த்தையும் அவனுக்கு வேதவாக்காய் ஒலித்தது. உறைந்து போய் நின்றவன் அவளது வார்த்தைகளில் உருகிப் போனான்.


அவள் எழுந்து அவனுக்கு மிக அருகே இயல்பாக வந்து நின்ற போது அவளின் கூந்தல் தந்த வாசனையில் அவனது உள்ளம் பசுமையாய்த் துளிர்த்தது. 


அவள் அவனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுத் திரும்பி நின்று தலையை மெல்லச் சாய்த்து,


"இப்போ நீங்களே எனக்குச் சூடிவிடுங்கள்" என்றாள்.                                   


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper