Story - ஆறாம் நிலத்திணைக் காதலர்.
யாரும் இல்லைத் தானே கள்வன்
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே - குறுந்தொகை
……………………………………………………..
ஆறாம் நிலத்திணைக் காதலர்.
குரு அரவிந்தன்
ஓன்ராறியோ ஏரிக்கரையில் இயற்கையாக அமைந்திருந்த பெரிய கற்களில் ஒன்றில் தனிமையில் உட்கார்ந்து கரைமோதும் அலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த ராதாவின் முகத்தில் சோகம் குடிகொண்டிருந்தது.
சில நாட்களாக மனம் சோர்ந்து போயிருப்பதற்குப் பிரிவுத்துயர்தான் காரணமாய் இருக்கலாம் என அவள் நினைத்தாள். உண்மைதான், அருகே இருக்கும் போது தெரியாத அருமையை, அவன் பிரிந்த போதுதான் புரிந்து கொண்டாள்.
அவனை முதன் முதலாகச் சந்தித்த நாளை அவளால் மறக்க முடியாததாக இருந்தது.
அவள் இந்த மண்ணுக்குப் புலம்பெயர்ந்து வந்து சில மாதங்கள்தான் ஆகியிருந்தன. பனிக்காலம் வரப்போகிறது என்று எல்லோரும் அதற்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்தார்கள். மழைக்காலத்திற்காக ஊரிலே எறும்புகளும், தேனீக்களும் சுறுசுறுப்பாக உணவு சேகரித்து வைப்பது போல, இவர்களும் இங்கே பனிக்காலத்திற்கான உணவு, உடை, பாதவணி என்று ஒவ்வொன்றாகச் சேகரிப்பதைப் பார்த்து இவளும் ஆச்சரியப்பட்டாள்.
பல்கலாச்சார நாடாக இருந்தாலும், மொழி பண்பாடு கலாச்சாரத்திற்கு மதிப்பளித்துத் தைமாதத்தை ‘தமிழர் மரபுத்திங்கள்’ என்று ஆறாம் நிலத்திணை நாடான கனடிய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. சங்ககாலத்து நான்கு நிலத்திணைகளான நெய்தல், மருதம், முல்லை, குறிஞ்சி ஆகியன பின்நாளில் பாலையையும் சேர்த்து ஐந்தாகின. இன்று தமிழர்கள் தாய்மண்ணை விட்டு வெளியே புலம் பெயர்ந்ததால் ‘பனிப்புலம்’ என்பதையும் சேர்த்து நிலத்திணைகள் ஆறாகித் தமிழ் இலக்கியத்திற்கு ‘ஆறாம் நிலத்திணை’ புதியதாகிவிட்டது.
அன்று தைப்பொங்கள் தினம்.
தமிழர்களின் முக்கிய திருநாளாக இருந்ததால், கோயிலில் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது. சிநேகிதியின் காரில்தான் இவள் கோயிலுக்கு வந்திருந்தாள். சினேகிதி வாசலில் நின்று அவசரமாக அழைக்கவே வழமையாக அணியும் பாதவணியைத்தான் அணிந்து வந்திருந்தாள்.
அவளது கூடாதகாலம் புறப்படும் போது இல்லாத பனிப்பொழிவு மெல்லமெல்ல அதிகரித்துக் கோயிலை அண்டியபோது உறைநிலைக்குப் போயிருந்தது. நவீன வசதிகள் இருப்பதால் முன்கூட்டியே இதை எல்லாம் அறிந்து கொள்ள முடிந்தாலும், இந்த நாட்டுக்குப் புதியவள் என்பதால் இவள் அதைக்கவனத்தில் கொள்ளவில்லை.
வண்டித் தரிப்பிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டுச் சினேகிதி இறங்க, இவளும் மறுபக்கத்தால் இறங்கிச் சில அடிகள் எடுத்து வைத்தவள், அப்படியே பனியில் சறுக்கிக் கீழே தடார் என்று விழுந்தாள். தன்னைத் தழுவிய மென்மையான ரோஜாவை விட்டுப்பிரிய மனமில்லாமல், எழுந்திருக்க முயன்றவளை மீண்டும் தன்னோடு அணைத்துக் கொள்ளமுயன்றது அந்தப் பொல்லாத உறைபனி.
சறுக்கி விழுந்து விட்டோமே என்று அவளுக்கு வெட்கமாக இருந்ததால், சினேகிதி பார்க்குமுன் அவசரமாக எழுந்திருக்க முனைந்தாள், முடியவில்லை.
கையொன்று அவளுக்கு முன்னாள் நீண்டிருந்தது. நிமிர்ந்து பார்த்தாள். இராணுவ வீரன்போல வாட்டசாட்டமாய் குளிராடை அணிந்த ஒருவன் கையை நீட்டியபடி நின்றான்.
ஒரு கணம் தயங்கினாலும், வேறு வழியில்லாமல் அவள் அவனது உதவிக்கரத்தைப் பற்றிக் கொண்டு மெல்ல எழுந்தவளின் முகம் வெட்கத்தால் சட்டென்று சிவந்து போயிற்று.
‘தவறான பாதவணியை அணிந்திருக்கிறீர்கள். உங்களால் இந்த உறைபனியில் நடக்கவே முடியாது, வாருங்கள் கோயிலுக்கு உள்ளே கொண்டு போய் விடுகின்றேன், கனடாவுக்குப் புதிதா?’ என்றவன்,
அவளது பதிலுக்குக் காத்திராமல் அவளது கையைப் பற்றியபடி உள்ளே அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் விட்டான், ‘திரும்பிப் போகும்போது பார்த்துப் போங்கோ’ என்று சொல்லிவிட்டுக் கூட்டத்தில் மறைந்து விட்டான்.
அவன் சென்று மறைந்த பின்தான் அவனுக்கு நன்றி சொல்ல மறந்து விட்டதை இவள் உணர்ந்தாள்.
தோழியுடன் கோயில் பிரகாரத்தைச் சுற்றிக்கும்பிட்டு, பிரசாதம் பெற்று, சற்று நேரம் உட்கார்ந்திருந்தனர். வாசல்வரை வண்டியைக் கொண்டு வந்த தோழி இவளை வீடுவரை ஏற்றிச் சென்றாள். பனிக்குளிர்காலத்தில் எப்படியான பாதவணியை அணிய வேண்டும் என்றும் திரும்பிப் போகும்போது அவளுக்கு அறிவுரை சொன்னாள்.
‘யாரடி அவன்?’
‘தெரியாது!’ என்றாள் இவள்.
‘நடக்க முடியாது என்று பாசாங்கு செய்திருந்தால் உன்னைத் தூக்கிட்டே போயிருப்பான் போல..!’
இவள் வெட்கத்தில் தலை குனிந்திருந்தாள். ‘ஒற்றைக் கையால் எப்படி அவன் தன்னைத் தூக்கினான்’ என்று இவள் வியந்து போயிருந்தாள். ஒரு ஆடவனின் ஸ்பரிசம் அவளுக்குள் உறைந்து போயிருந்தது.
‘என்னடி, வெட்கப்படுகிறாயா?’
‘இல்லை, நான் அவனுக்கு ஒரு ‘தாங்ஸ்’ கூடச் சொல்லலையே!’ இவள் மனம் வருந்தினாள்.
‘இவளொருத்தி..!’ தோழி ஆச்சரியப்பட்டாள்.
அப்புறம் ஒருநாள் சென்ரானியல் கல்லூரியில் எதிரெதிரே அவனைச் சந்திக்க வேண்டி வந்தது.
‘நீங்களா, எப்படி இருக்கிறீங்க?’ என்றான்.
இவள் ‘நல்லாயிருக்கேன்’ என்று தலையை மட்டும் அவசரமாய் அசைத்தாள்.
‘இங்கேதான் படிக்கிறீங்களா?’ என்றான்.
அதற்கும் ‘ஓம்’ என்று தலையசைத்தாள்.
‘பேசவே மாட்டீங்களா? பேசாட்டிப் பரவாயில்லை, ரேக்கெயர்’ என்று சொல்லி விட்டு அவன் நகர்ந்தான்.
‘எனக்கு என்னாச்சு, நான் ஏன் அவனைக் கண்டதும் மௌனமாகிவிடுகிறேன்?’ என்று அவன் சென்ற பின்தான் தன்னைத்தானே நொந்து கொண்டாள்.
ஒருநாள் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவனிடம் அவளாகவே தயக்கத்தோடு சென்று அவன் முன்னால் நின்றாள்.
‘என்ன?’ என்பது போல அவன் நிமிர்ந்து பார்த்தான்.
இனியும் மௌனம் சரிவராது என்பதை உணர்ந்தவள், அன்று கோயிலில் அவன் செய்த உதவிக்கு நன்றி சொன்னாள். ஒரு புன்சிரிப்போடு அதை அவன் ஏற்றுக் கொண்டான்.
அதன் பின் அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். அவனை நோக்கித் தான் ஈர்க்கப்படுவதை அவள் உணர்ந்தாள். ‘பொல்லாத மனசு’ என்று அதற்கும் தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். ஆனாலும் அந்தப் பொல்லாத மனசு மீண்டும் மீண்டும் அவனைத்தான் தேடியது.
சற்றுத் தள்ளியிருந்த கல்லில்தான் அவர்கள் விடுமுறை நாட்களில் அமர்ந்திருப்பார்கள். இருட்டி விட்டது கூடத் தெரியாமல் மணிக்கணக்காக உரையாடுவார்கள்.
‘என்ன மௌனமாய் இருக்கிறீங்க?’ என்றாள்.
‘இல்லை எப்படி சொல்வதென்று தெரியலை!’ என்றான்.
‘ஏன் என்னாச்சு?’ அவள் கண்களில் பயம் தெரிந்தது.
‘ஊரில் இருந்து அக்கா மின்னஞ்சல் அனுப்பி இருக்கின்றாள். அம்மாவுக்குக் கடுமையான சுகவீனமாம், படுக்கையில் இருக்கிறாவாம், உடனே வரும்படி எழுதியிருக்கிறாள். அம்மாவை நினைச்சால் பயமாயிருக்கு.’
அவனது கண்கள் கலங்கி அழுதுவிடுவான் போலிருந்தது.
அவனது துயரத்தைத் தணிக்கக் ‘கவலைப்படாதீங்க’ என்று ஆறுதல் சொன்ன இவள் அருகே நகர்ந்து அவனது தலையை ஆதரவாய் மெல்ல வருடி விட்டாள். அதுவே அவனுக்குச் சாதகமாக, மெல்லக் கண்களை மூடிய அவன் விம்மியபடி அவளது மடியில் தலை சாய்க்க, அவள் அவனை மார்போடு இறுக அணைத்துக் கொண்டாள். அவனது சூடான மூச்சுக்காற்று அவளது மார்பில் பட்டு ஏதேதோ செய்தது. துயரத்தில் என்ன செய்கிறோம் என்பது அவர்களுக்குப் புரியவில்லை, தனிமையில் கட்டுப்பாட்டை மீறிவிடுவோமோ என்று அவள் பயந்தாள்.
‘அதிலே என்ன, உங்களைப் பெற்றெடுத்த தாய்தானே, போய்ப் பார்க்க வேண்டியது தானே!’ என்றாள் சட்டென்று தன்னைச் சதாரித்துக் கொண்டு.
அவன் தயங்கினான்.
‘என்ன தயங்கிறீங்க, போவதற்குப் பணம் இல்லையா?’
‘இல்லையில்லை, காரணம் அதுவல்ல, உன்னைப் பிரிந்து போகவேணுமே, அதுதான்!’
‘பரவாயில்லை, கொஞ்ச நாட்களுக்குத்தானே போயிட்டு வாங்க, பாசத்தையும் காதலையும் போட்டுக் குழப்பிக்காதீங்க, யாராக இருந்தாலும் பிரிவுத் துயரை தாங்கித்தானேயாகணும்’
அவளுடைய விருப்பத்தோடுதான் பிரிய மனமில்லாமல் பிரிந்து, அவன் தனது தாயைப் பார்க்க ஊருக்குக் கிளம்பிச் சென்றான்.
செல்பேசியில் அடிக்கடி கதைத்துக் கொள்வார்கள். தாயார் மரணமாகிவிட்டதாகவும், மரணச்சடங்கை முடித்துக் கொண்டு விரைவாக வருவதாகவும் சொல்லியிருந்தான். அவள் அவனது துயரத்தில் பங்குபற்றி அவனுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லியிருந்தாள். இன்பமோ, துன்பமோ புகுந்த மண்ணில் அவனது இருப்பை அருகே இருந்து உறுதி செய்வதுபோல, அவளுடைய செல்போன்தான் அவளுக்குப் பக்கத் துணையாக இருந்தது.
‘தாயாரை நிரந்தரமாகப் பிரிந்த அவனது துயரோடு ஒப்பிடும்போது எனது துயர் ஒன்றும் பெரிதல்ல’ என்று அவள் தனக்குள் சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
கடந்த இரண்டு நாட்களாக அவனுடன் எந்தவித தொடர்பும் கொள்ள அவளால் முடியவில்லை. இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தாலும் சந்தேகத்தின் பெயரில் கைதுகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.
இரண்டு நாட்களுக்கு முன் இவன் தங்கியிருந்த கிராமத்தை அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து பல இளைஞர்களை கைது செய்திருப்பதாக முகநூல் செய்திகள் தெரிவித்தன. இவனுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. இவனைப்பற்றி இதுவரை எந்தச் செய்தியும் இவளுக்குக் கிடைக்கவில்லை.
அவனுடன் தொடர்பு கொள்ள முடியாததால், மனசு நிம்மதியின்றித் தவித்தது.
வழமையாக அவர்கள் அமர்ந்திருக்கும் கல்லில் கடற்புறா ஒன்று கரையில் முட்டி மோதும் தண்ணீரை வைத்தகண் வாங்காது பார்த்தபடி தனிமையில் தவம் இருந்தது. வெள்ளை நிறமான இந்தப் பறவை அவளுக்குப் பழக்கமானது. அடிக்கடி இந்த இடத்தில் அதைக் காண்பாள், காரணம் அந்தப் பறவையின் ஒரு கால் விரல்களுக்கிடையே பொலித்தீன் பையின் ஒரு துண்டு சிக்கெடுக்க முடியாதவாறு சிக்கியிருந்தது. அதனால் அந்தப் பறவை நொண்டிக் கொண்டே ஏதாவது ஒரு கல்லில் இரைக்காக உட்கார்ந்திருக்கும். இவர்கள் சாப்பிடுவதில் எதையாவது போட்டால் அருகே வந்து நன்றி சொல்வது போலத் தலையை அசைத்து மகிழ்வோடு உண்ணும்.
தெரிந்தோ, தெரியாமலோ இந்தக் காதல் ஜோடியின் இன்ப துன்பங்களை, அவர்கள் களவாடிய தருணங்களை அறிந்தவொரு பறவையாகவும் அந்தப் பறவைதான் இருந்தது.
இவளது தனிமையைப் புரிந்து கொண்டோ, என்னவே தலையைச் சாய்த்து இவளைப் பரிதாபமாகப் பார்த்தது.
‘சீஹல்’ என்ற இந்தக் கடற்புறாக்களைப் பார்க்கும் போதெல்லாம் சங்க இலக்கியத்தில் அவள் படித்த ‘குருகு’ பறவைகளின் ஞாபகம் அடிக்கடி வரும். சங்கக்காதலர்களின் களவொழுக்கத்தைக் கண்ட சாட்சிகளாக அவை இருந்தன என்று சங்கக்கவிதைகளைப் படித்த போது அதீத கற்பனை என்றுதான் இதுவரை காலமும் நினைத்தாள்.
பனிப்பிரதேசமான இந்த மண்ணில் இருக்கும் இந்த சீஹல் பறவைகளும் குருகு போலவே பார்வைக்கு ஓரளவு இருந்ததால், காதலனது பிரிவால் தவிக்கும் தன்னிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தாள்.
வழமைபோல, உறுமீனுக்காகச் சீஹல் அந்தக் கல்லில் காத்திருக்கலாம், அதற்கு எந்த மீன் அகப்பட்டாலும் அதன் தேவை ஒன்றாகத்தான் இருக்கும். ஆனால் இவளுக்கு அப்படியல்ல, அவனைத் தவிர வேறுயாரையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவிற்கு அவன்மீது அவள் பைத்தியமாய் இருந்தாள்.
காதலர்களின் பிரிவுத்துயரை மற்றவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்க முடியாது. தங்களுடைய அந்தரங்கம் பற்றியோ, அவன் திரும்பி வரவி;ல்லை என்றோ யாருக்கும் சொல்லிக்கூடப் புலம்பமுடியாமல் அவள் தவித்தாள்.
நல்லசெய்தி வரும், அவன் நிச்சயம் வருவான் என்ற நம்பிக்கையோடு கையிலே செல்போனை வைத்துக்கொண்டு தினமும் ராதை காத்திருக்கிறாள், நம்பிக்கைதானே வாழ்க்கை!
Comments
Post a Comment