Story - கோயிற் சிலையோ?

 


கோயிற் சிலையோ?


குரு அரவிந்தன்


கண்களைத் திறந்த போது தேவதை போல அவள் எதிரே தெரிந்தாள். அம்மனே கர்ப்பகிரகத்தில் இருந்து முன்னால் வந்து தரிசனம் தருகிறதோ என்ற நினைப்பில் கூப்பிய கரங்களை எடுக்க மறந்தேன். 

பெண்மையின் இயற்கையின் அழகு, நீண்டு விரிந்த கூந்தலின் கலைந்த ஓரங்கள் வெள்ளிச் சருகையாய் மின்னின. அன்றலர்ந்த ரோஜா போன்ற மஞ்சள் கலந்த சிரித்த முகம், அந்த முகத்தில் குங்குமக் கோலம். காலமெல்லாம் அந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல ஒரு தெய்வீகத் தோற்றம்!

‘தம்பி ஊருக்குப் புதிதோ?’ படிக்கட்டில் உட்கார்ந்திருந்த முதியவர் கண்களை இடுக்கி என்னையே பார்த்தபடி கேட்டார். வாடகைக்காரில் இருந்து நான் இறங்கி வந்து கோயில் வாசலிலேயே நின்று கும்பிடுவதை அவர் அவதானித்திருக்க வேண்டும்.

‘இல்லை’ என்று தலை அசைத்தபடி அலை பாய்ந்த மனத்தை, இழுத்துப் பிடித்து என்னை நானே சுதாரித்துக் கொண்டேன்.

‘யாரென்று தெரியலையே..?’

‘கந்தசாமி மாஸ்டரின் மகன்’ என்றேன்.

‘அது தானே பார்த்தேன், தெரிந்த முகமாய் இருக்கிறதே’ 

‘அமெரிக்காவிலேயே தங்கிவிட்டதாக அப்பா சொன்ன ஞாபகம’; என்றார்.

அவள் அர்ச்சனைத் தட்டுடன், அன்னநடை நடந்து வாசலில் உள்ள படிக்கட்டுகளுக்கு நோகாமல் அடிமேல் அடிவைத்து மெதுவாக இறங்கினாள்.

அருகே வந்த அவளைக் கண்ணுக்குள் படம் பிடித்தேன். நெற்றியில் பளீச் சென்ற குங்குமப்பொட்டு. கூந்தலைத் தழுவிய மல்லிகைச் சரம். சேலைக்குள் ஊஞ்சலாடும் தாலி. தாய்மையின் மென்மைப்பொலிவ

‘ஆமா, கிட்டத்தட்ட இருபத்தியேழு வருடங்களாகி விட்டது.’ என்றேன்.

‘அப்படியா, ராமனின் வனவாசத்தைவிட இது கொஞ்சம் அதிகம்தான்!’ 

அவள் ‘க்ளுக்’ என்று குலுங்கியது எனக்கு மெதுவாகக் கேட்டது. 

சட்டென்று திரும்பினேன், எங்கேயோ பார்த்த நினைவில் நிற்கும் முகம்!

‘மேற்படிப்பிற்காக அமெரிக்கா போனேனா, படித்து முடிந்ததும் அங்கேயே தங்கி விட்டேன். குடும்பம், குழந்தை குட்டியென்று இப்போது தான் பிறந்து வளர்ந்த ஊர் ஞபகம் வந்தது.’ 

‘சொந்த பந்தங்களைப் பார்த்து விட்டுப் போக வந்ததாக்கும்’

‘அம்மா படுக்கையில் கிடக்கிறாள் என்று செய்தி வந்தது’

அவள் முழங்காலை மடித்து அடக்கமாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தாள். முதியவர் திரும்பி அவளைப் பார்த்தார்.

‘தம்பிக்குப் பிரசாதம் கொடம்மா’ என்றார்.

அவள் எழுந்து வந்து இரண்டு கைகளாலும் தட்டை என்னிடம் நீட்டினாள்.

வெற்றிலையில் இருந்த வீபூதியை எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டேன்.

அவள் அருகே வந்து நின்றபோது எப்போதோ, எங்கேயோ முகர்ந்த நறுமணம் மீண்டும் சுகந்தமாய் சுவாசத்தில் கலந்தது.

‘அதுசரி தம்பி பயணம் வர்றது வீட்டில தெரியுமோ!’

விளையடிக் களைத்து வியர்வைசிந்த ஓடி வந்தான் ஒரு பையன்.

‘என்னம்மா கூப்பிட்டீங்களா?’

‘இல்லையே’ என்றாள் அவள்.

முகத்தில் வழிந்த வியர்வையைக் கைவிரலால் வழித்துக் கொண்டே என்னைப் பார்த்தான் அவன்.

‘உங்க பையனா, என்ன பெயர்?’

‘ராஜா!’ என்றான் பையனே முந்திக் கொண்டு.

‘என்ன கிளாஸ் படிக்கிறே?’

‘அஞ்சாம் கிளாஸ்!’

‘நல்லது, நான் கிளம்பறேன்!’ பொதுவாகச் சொல்லி விட்டுக் கிளம்பினேன்.

வீட்டிலே வரவேற்பு எப்படி இருக்குமோ?

எல்லோர் முகத்திலும் படிப்படியாகக் கேள்விக்குறியும், ஆச்சரியமும் அதைத் தொடர்ந்து மகிழ்ச்சியும் தெரிந்தது. படுக்கையில் கிடந்த அம்மாவின் கண்கள் மட்டும் எனக்குப் பின்னால் யாரையோ தேடிவிட்டு ஏமாற்றத்தில் வாடிப்போனது.

நான் கொண்டு வந்த சூட்கேஸைத் திறந்து முதலில் சாக்லெட் எடுத்து எல்லோருக்கும் நீட்டினேன். வாசலில் நிழல் தட்டியது. கோயிலில் கண்ட அதே பையன்.

‘சாவி வாங்கிட்டுப்போக வந்தேன்’ என்றான்.

தங்கை சாவியை எடுத்து அவனிடம் கொடுக்க, நான் கையிலிருந்த சாக்லட்டை அவனிடம் நீட்டினேன்.

‘தாங்யூ’ என்று சொல்லிக் கொண்டே அவன் சாக்லெட்டோடு ஓடி மறைந்தான்.

‘சுட்டிப் பயல் அவன் அப்பாவைப் போலவே இருக்கிறான்’ என்றார் அப்பா.

‘என்னப்பா சொல்றீங்க, யார் அந்தப் பையன்?’

‘தெரியல்லையா?’

‘தெரியல்லையே வரும்போது கோயிலில பார்த்தேன்!’

‘வேறு யாருமில்லை, உன்னோட ப்ரெண்ட் சிவாவோட பையன்’

‘சிவாவோட மகனா? அப்போ நான் கோயிலில் பார்த்தது சிவாவோட மனைவியா?’

‘கோயிலிலே அவளைப் பார்த்தியா?’

‘ஆமா!’ என்றேன்

‘அது யாரென்று அடையாளம் தெரிஞ்சுதா?’


‘இல்லையேப்பா! அவளை எங்கேயோ பார்த்த ஞாபகம் மட்டும் இருக்கு’

‘பார்த்த ஞாபகமாவது இருக்கே! அதுதான் சாரு, மறந்திட்டியா?’ 

‘சாருவா?’ ஒரு நிமிடம் சிந்தித்தேன். 

பழைய நினைவுகள் மீண்டும் பசுமையாய்ப் பூத்தன.

‘ஓ, மைகாட் அவளா? அவளையா சிவா கல்யாணம் செய்தான்?’

‘ஏன்? உனக்கு ஆச்சரியமாய் இருக்கா? அவளே தான்!’

அப்பா இப்படி எல்லாம் என்னோடு முகம் கொடுத்துப் பேசுவார் என்று நான் எதிர்பார்த்து வரவில்லை. அவருடைய சம்மதம் இல்லாமல் தான் எனது திருமணம் அமெரிக்காவில் நடந்தது. எனக்கு எப்படி வரவேற்பு இருக்குமோ என்று தெரியாத படியால்தான் நான் எனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு வரவில்லை. நான் எதிர்பாராத விதமாய் இங்கே மனித மனங்களில் ரொம்ப மாற்றங்கள் நடந்திருக்கின்றன! 

கடந்தகால அனுபவங்கள் அவர்களை மாற்றி இருக்கலாம். எதையுமே யதார்த்தமாய் எடுத்துக்கொள்ளப் பழகியிருந்தார்கள்.

என்னால் மறக்க முடியுமா அந்தக் கல்லூரிப் பருவத்து நாட்களை?

நான், சிவா, கண்ணன், நாதன், சூரியா எல்லோரும் பள்ளித் தோழர்கள். 

எங்களைப் பஞ்சபாண்டவர் என்று தான் சொல்வார்கள். சிவாதான் வயதில் கூடியவன். அம்மன் கோயில் கிழக்குத் தெரு மூலையிலே உள்ள அந்தப் பெரிய நீண்ட கருங்கல்லுப் பாறைதான் எங்கள் தங்குமடம். அந்தக் கல்லிலே உட்கார்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டு தினமும் அரட்டை அடிப்போம். அரட்டை என்றால் சும்மா அரட்டையல்ல, ஊர்வம்புதான்!

பக்கத்து டவுணுக்கு இந்தத் தெரு வழியாகத்தான் போகவேண்டும். அன்றும் அப்படி அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது தான் அவளை முதன் முதலாகப் பார்த்தோம். 

வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிந்து பளீச்சென்று சயிக்கிளில் போனாள். பெண்களால் சயிக்கிள் ஓட்டமுடியும் என்பதைக்கூட நினைத்துப் பார்க்க முடியாத இந்தக் குக்கிராமத்தில் அவள் சயிக்கிளில்; போனது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.  ஏனென்றால், கிராமத்தில் ஆண்கள் மட்டுமே சைக்கிள் ஓட்டிய காலமது.

அரபுக் குதிரைமாதிரி கூந்தலைப் பின்னால் போனிரெயில் போட்டு அவள் கர்வத்தோடு எங்களை அசட்டை செய்துவிட்டு சயிக்கிளில் போனது எங்களுக்கே சவால் விடுவதுபோல இருந்தது.  ஏனோ அந்தக் காட்சி எங்களுக்கு எரிச்சலைத்தான்; தந்தது. எங்களுக்குப் போட்டியாக ஒரு பொண்ணு சயிக்கிள் ஓட்டுவதா?

அதன்பின் தினமும் சயிக்கிளில் அவள் எங்களைக் கடந்து அந்தத் தெருவால் போகத்தொடங்கினாள். அவளைப் பார்ப்பதற்கென்றே தினமும் தெருவிலே கூட்டம் சேரத்தொடங்கியது. 

‘என்னமாய்ச் சயிக்கிள் ஓட்டுறாள்!’ என்று சிறுசு முதல் பெரிசுவரை ஊரிலே பேசிக் கொண்டார்கள். வெகுவிரைவில் கிராமத்து வயசுப் பெண்களுக்கு அவள் ஒரு ஹீரோயின் ஆகிவிட்டாள்!

யாரிவள்? எங்கள் எரிச்சலைக் கொட்டிக் கொண்டு தினமும் ,வள் எங்கே போகிறாள்?

மறுநாள், நாதன் அவளைப் பற்றிய முழுவிவரங்களை முன்வைத்தான்.

பெயர் சாருலதா, பக்கத்துக் கிராமம். வயது பதினெட்டோ, பத்தொன்பதோ இருக்கலாம். பக்கத்துடவுண் நர்ஸிங்ஹோமில் நர்ஸ்ஸாகச் சேர்ந்திருக்கிறாள். தினமும்  நம்ம தெருவைக் கடந்துதான் டவுனுக்குப் போகிறாள் என்று விளக்கம் கொடுத்த நாதன், அவளைப் பற்றி தினமும் புதுப்புதுக் கிசுகிசுக்களையும் சேகரித்துக் கொண்டு வந்தான். 

அவளுடைய கரக்டர் சரியில்லையாம்! நர்ஸிங்ஹோமில் எல்லா ஆண்களோடும் சிரிச்சுச் சிரிச்சுப் பேசுகிறாளாம்! அவளைப் பற்றி ரொம்ப மோசமாய் ஊரிலே பேசிக்கிறாங்களாம்!

எனக்கு அந்த வயதில் சிலசமாச்சாரங்கள் புரிவதில்லை. ஏனென்றால் எங்க கூட்டத்தில் நான் தான் வயதிலும் உருவத்திலும் சின்னவன். 

‘அப்படின்னா என்ன?’ என்று கேட்டு வைத்தேன்.

‘ரியூப்லைட், இது கூடத் தெரியாதா?’ என்றான் நாதன்.

ஏனோ அவளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் சிவாவிற்கு மட்டும் கோபம் வருவதை நான் அவதானித்தேன். அன்று மாலை வழமை போல அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது அவள் எங்களைக் கடந்து சயிக்கிளில் போனாள்.

‘ஆட்டோ’ என்று சத்தம் போட்டுக் கத்தினான் நாதன். அதன் அர்த்தம் என்னவென்று எனக்கு உடனே புரியாவிட்டாலும், நானும் மற்றவர்களுடன் சேர்ந்து என் பங்கிற்கு உரக்கக் கத்திவைத்தேன்.

அவள் திரும்பிப் பார்த்தாள்.

‘வருமா?’ என்றான் சிவா.

அவள் முகத்தில் எதிர்பாராத அதிர்ச்சி தெரிந்தது. எதுவுமே சொல்லாமல் தலை குனிநது கொண்டு போய்விட்டாள். அவளை நன்றாக அவமானப்படுத்தி விட்டதாக நாங்கள்  நினைத்தோம். அழுதிருப்பாளோ?

மறு நாள் வழமையாக வரும் நேரத்தில் அவள் வரவில்லை. சற்று நேரத்தின் பின் சயிக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தாள். எங்களைக் கடந்து சென்றவள், நின்று பின் நிதானமாக எங்களை நோக்கித் திரும்பி வந்தாள்.

‘எக்யூஸ்.....மீ’ என்றாள்.

‘என்ன?’ என்பது போல நிமிர்ந்து பார்த்தோம்.

நாதன் நடுங்கிப் போய்விட்டான். ஏதாவது பிரச்சனையோ?


‘இஃவ்யூ...டோன் மைண்ட்.....சயிக்கிள் பம் இருக்குமா?’

அப்பாடி, நாதன் பயந்தது போல பிரச்சனை ஒன்றுமில்லை. உஷாரானோம்!

‘தமிழில் சொன்னால் தான் எங்களுக்குப் புரியும்’ என்றான் கண்ணன்.

‘வந்து, முன்சில்லு காற்றுப் போய்விட்டது அதுத்தான்..!’ தயங்கினாள்.

‘அத்தானோ..?’ சிவாதான் குரலை உயர்த்திக் கேட்டான்.

‘இல்லை வந்து, ஐம் சொறி’ சிவா இப்படிச் சொல்வான் என்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்து போய் ஒரு கணம் நின்றவள், எதுவும் பேசாது சயிக்கிளைத் தள்ளிக் கொண்டு நடந்தாள்.

மறுநாள் அந்தப் பக்கம் அவள் வரவேயில்லை. 

அண்ணன் தம்பி என்று ஆட்சேர்த்துக் கொண்டு வருவாளோ? எதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்.

மறுநாள் பாடசாலையில் தலைமையாசிரியர் எங்களை மட்டும் கூப்பிட்டனுப்பினார். என்னவோ ஏதோ என்று பயந்தபடியே சென்ற எங்களை அவரது அறைக்கு வெளியே வரிசையாக நிற்கவைத்தார்.

‘ஆட்டோவில யாராவது நின்று கொண்டு போவாங்களா?’ என்று கிண்டலாகக் கேட்டார். நாங்க யருமே பதில் சொல்லவில்லை. ஏதோ புரிந்தது போல அருகே நின்ற நாதன் மெல்ல இடித்தான்.

‘இப்ப நீங்க எல்லோரும் நின்றுகொண்டு ஆட்டோவில் போகப்போறீங்க’ என்று சொல்லி எல்லோரையும் அங்கே இருந்த பென்ஞ்சு மேல ஏறி நிற்கச் சொன்னார்.

‘போச்சு, மானம் போச்சு....!’ அம்மா தலையிலே அடித்துக் கொண்டாள்.

அப்பா இருட்டிய பின் தான் வீட்டிற்கு வந்தார். அவரது மௌனம் என்னவோ செய்தது. பெயர் சொல்லிக் கூப்பிட்டார்.

‘சாப்பிட்டியா?’ மௌனமாய் இருந்தேன்.

‘என்னாச்சு உனக்கு ஊர் வம்பை ஏன் விலைக்கு வாங்குகிறாய்? நீ படித்து நன்றாக வரவேண்டும் என்று தான் நான் கஷ்டப்படுகிறேன். இங்கே இருந்தால் உருப்படமாட்டாய். என்ன செலவானாலும் காணி பூமியை விற்று என்றாலும் அமெரிக்காவிற்கு அனுப்பிப் படிக்கவைக்கப் போகிறேன். நீ அங்கே தான் படிப்பைத் தொடரப் போகின்றாய், புரியுதா?’ அப்பா முடிவாகச் சொன்னார்.

சொன்னது மட்டுமல்ல அமெரிக்காவில் உள்ள தூரத்து உறவினர் ஒருவரோடு தொடர்பு கொண்டு அவர் மூலம் அதைச் செய்கையிலும் காட்டினார்.

அன்று போனவன் படித்து பட்டம் பெற்று வேலை தேடி குடும்பஸ்தனாகி இன்று தான் பிறந்து வளர்ந்த மண்ணுக்குத் திரும்பி வந்திருக்கிறேன். 

அதே கோயில், அதே தெரு, அதே வாய்க்கால், அதே படிக்கட்டு, என்று கிராமத்தில் பெரிதாக மாற்றமெதுவும் தெரியவில்லை ஆனால் முகங்களில் மாற்றம் தெரிந்தது.

சாயந்தரம் சிவா வீடு தேடி வந்தான்.

‘ஹாய், சிவா எப்படி இருக்கே?’

‘நல்லாய் இருக்கேன், ராஜா சொன்னான்’ என்றான்.

இருவரும் பழைய கதைகளை அசைபோட்டுக் கொண்டு கிழக்குத் தெருவால் கோயிலை நோக்கி நடந்தோம். சிவா தன் கதையைத் தொடர்ந்தான்,

‘அப்புறம் என்ன? நீ திடீரென அமெரிக்கா போய்விட்டாய். கண்ணனும் சூரியாவும் கொஞ்ச நாட்களில் துபாயில் உத்தியோகம் எடுத்துக் கொண்டு பிரிந்து போய்விட்டார்கள். நான் தான் தனித்துப் போய்விட்டேன். வீட்டிலோ பிரச்சனை. எனக்கோ அவமேலே இருந்த கோபம் தீரலை. பல்லைக் கடித்துக் கொண்டு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன். ஒரு நாள் வசமாக மாட்டிக் கொண்டாள். இருட்டும் நேரம் சயிக்கிளில் வந்தாள். முன்னால் பாய்ந்துபோய் சயிக்கிளை நிறுத்தினேன். இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் முகத்தில் பயம் தெரிந்தது.

‘ஏன்டி, நீ என்னை ஏன் இப்படி மாட்டிவிட்டாய்? நாங்கள் என்ன சொல்லிவிட்டோம் என்று முறைப்பாடு செய்தாய்? 

அவள் ஏதும் பேசாமல் மௌனமாய் தலை குனிந்து கொண்டு நின்றாள்.

அவள் கண்களில் மருட்சி தெரிந்தது. அவளது மௌனம் மேலும் எரிச்சலைத் தந்தது. வாயில் வந்தபடி திட்டினேன்.

‘ஏன்டி உனக்கு வீட்டிலே அடக்கமாய் ஒரு குடும்பப் பெண்ணாய் இருக்கத் தெரியாதா? வேலையாம் வேலை! கண்ட கண்ட ஆண்களோட எல்லாம் பேசிச் சிரித்துக் கொண்டு இப்படி மானம்கெட்டு நடக்க உனக்கு வெட்கமாய் இல்லை?’

இதுவரை பொறுமையாய் இருந்தவள் ஆத்திரத்தில் மௌனம் கலைத்தாள்.

‘இந்தா பாருங்க, நீங்க என்ன தான் மனசிலே நினைச்சிட்டு இருக்கிறீங்க? எனக்கு சொந்தம் என்று சொல்லிக்க பாரிசவாதத்தாலே நடக்க முடியாத என் அப்பாவைத் தவிர வேறு யாருமில்லை. எங்க அப்பாவை நான் தான் வைத்துக் காப்பாற்றணும். வயிறு என்று ஒன்றிருக்கே! அதற்காகவாவது நான் வேலைக்குப் போய்த் தான் ஆகணும். ஒரு பேஷன்ட்டோட அன்பாய்ப் பேசி அந்த நோயாளியை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டியது ஒரு நர்ஸோட கடமை. அதை மற்றவர்கள் தப்பாக நினைத்தால் நான் என்ன செய்யட்டும். நான் கான்வென்டில் தான் படித்தேன். அதனாலே கொஞ்சம் ஃபோவேட்டாக இருக்கிறேன். அவ்வளவுதான். நான் எந்தத் தப்புமே செய்யலை, நான் ஏன் பயப்படணும்? யாருக்குப் பயப்படணும்?’

‘ஓ கோ, நீ பயப்பட மாட்டாய், நீ கெட்டது போதாதென்று நம்ம ஊர் பெண்களையும் கெடுத்திடாத, இனிமேல் இந்தப் பாதையால இந்தச் சயிக்கிள் போகக் கூடாது. புரிஞ்சுதா?’ மிரட்டிக் கொண்டே, ஆத்திரத்தில் அவளது சயிக்கிளைக் காலால் எட்டி உதைத்தேன்.

அவள் நிமிர்ந்து பார்த்தாள். பார்வையில் சினம் தெரிந்தது.

‘மிஸ்டர் உங்களைப் பார்த்தால் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் போலத்தான்

தெரிகிறது. ஏன் இப்படி தெருவிலே நின்று அனியாயமாய் கலாட்டா பண்ணுறீங்க. உங்க அப்பா அம்மா உங்களுக்காக எவ்வளவு கஷ்டப் படுகிறாங்க என்று எப்பவாவது நினைச்சுப் பார்த்திருக்கிறீங்களா? அரும்புமீசை வைச்சுக்கிட்டா மட்டும் போதாது ஒரு ஆம்பிளையாகவும் நடந்து காட்டணும். நீங்க சொன்னது போல எனக்கும் ஒரு நல்ல மனைவியாய், குடும்பப் பெண்ணாய் இருக்க ஆசைதான். யாரையா எங்களைக் கட்டிக்குவான்? இந்த நிமிடமே நான் வேலையை விட்டுர்றேன், என்னைக் கட்டிக்கிறியா? நீ என்னை வைத்துக் காப்பாற்றுவியா? உனக்கு நல்ல மனைவியா நான் வாழ்ந்து காட்டுறேன், உன்னாலே முடியுமா?’ 

அவள் சென்று நெடுநேரமாகியும் அவள் தந்த அதிர்ச்சியில் இருந்து என்னால் மீளமுடியவில்லை. என் ஆண்மைக்குச் சவால் விட்டு விட்டாளே.

 ‘நான் யார் இதை எல்லாம் கேட்பதற்கு’ என்று சொல்லாமற் சொல்லிவிட்டுப் போனாளே. அப்போது தான் எனக்குப் புரிந்தது அவள் மேல் என்னை அறியாமலே ஒரு வகை அனுதாபமோ இல்லை ஈர்ப்போ இருந்திருக்கிறது. அது தான் என்னை இப்படி எல்லாம் பேசவைத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.

அப்புறம் என்ன, சவாலை ஏற்றுக்கொண்டேன். இங்கேயே நல்ல வேலை ஒன்று தேடிக் கொண்டேன். உன் அப்பாவிடம் தான் தயங்கித் தயங்கி நடந்ததைச் சொன்னேன். அவர் நிதானமாகச் சிந்தித்து விட்டு என்முடிவு என்ன என்று கேட்டார். அவளுக்குச் சம்மதம் என்றால் மூன்று முடிச்சுப் போட நான் தயாராக இருக்கிறேன்’ என்றேன்.

அவர் சிரித்து விட்டுச் சொன்னார்,

‘சிவா, நீயும் உன் தோழர்களும் படித்து விட்டு ஒரு பொறுப்புமில்லாமல் இருந்தீர்கள். கற்பனை தான் வாழ்க்கை என்று நினைத்து, அந்த வயதிலே இப்படி எல்லாம் நடந்து கொள்வது சகஜம்தான். கூட்டாளிகள் எல்லோருமே எதையுமே சாதிக்காமல் இந்தக் கிராமத்தை விட்டே போய்விட்டார்கள். நீ ஒருவன் மட்டும் தான் ஆண்மகனாய் இன்றைய இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டாய் இருக்கின்றாய். சீர்சனம் என்று புலம்பும் இன்றைய சமுதாயத்தில் காலத்திற் கேற்ப நீ எடுத்த இந்த முடிவு ரொம்பவும் வரவேற்கத்தக்கது. ஒன்றை மட்டும் ஞாபகம் வைச்சுக்கோ, எந்தக் கல்லில் உட்கார்ந்து நீங்கள் எல்லாம் அசிங்கப்படுத்திக் கொண்டு இருந்தீர்களோ, அந்தக் கல்லைத் தான் சிற்பி தெரிந்தெடுத்து சிலை வடித்தான். தெருவிலே இருந்த அந்தக் கல்லுத்தான் இன்று கோயிலிலே தெய்வமாகி நின்கின்றது. அந்தத் தெய்வத்தைத்தான்; கையெடுத்துக் கும்பிடுகின்றோம். பெண் என்பவளும் அப்படித் தான். தெருவிலே நின்றால் அவள் எல்லோராலும் விமர்சிக்கப் படுகின்றாள். குடும்பம் என்கிற கோயிலில் குடியிருந்தால் எல்லோராலும் மதிக்கப்படுகின்றாள். உங்கள் குடும்ப வாழ்க்கை நன்றாக அமைய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.’

என்னோட அப்பாவா இப்படி வாழ்த்தினார். காலம் மனிதர்களை எப்படி எல்லாம் மாற்றுகின்றது. நான் உணர்ச்சி வசப்பட்டு சிவாவின் கைகளைப் பற்றினேன்.

‘சிவா, நான் வெளிநாட்டில் படித்தாலும் இன்றும் பழமையில் ஊறித்தான் இருக்கிறேன் என்பதை நினைக்க எனக்கே வெட்கமாக இருக்கின்றது. நீயோ இந்தக் கிராமத்தில் இருந்து கொண்டு முற்போக்கான சிந்தனையோடு புதுமைப் புரட்சி செய்திருக்கின்றாய். அதை நினைத்துப் பார்க்க எனக்கே பெருமையாய் இருக்கிறது. உன்னைப் போன்ற உயர்ந்த உள்ளங்கள் தான் இந்த மண்ணிற்குத் தேவை. ஆல்த பெஸ்ட்’ 

‘மனைவி குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாமோ?’ என்ற சிந்தனையோடு நான் மௌனமாய் வீடு நோக்கி நடந்தேன். 

எனக்கும் அந்தக் காலத்தில் சாருமேல ஒருவகை ஈர்ப்பு இருந்தது என்பதை நான் சிவாவிடம் கடைசிவரை காட்டிக் கொள்ளவே இல்லை.




Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper